ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு


தினத்தந்தி 5 Feb 2025 7:00 AM IST (Updated: 5 Feb 2025 6:07 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி (அதாவது இன்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க. உள்பட எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்தன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.02 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், சாமியானா பந்தல், மின் விளக்குகள் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 100 மீட்டர், 200 மீட்டர் தொலைவு கோடுகள் போடப்பட்டு உள்ளன. 200 மீட்டர் தொலைவில் வேட்பாளரின் தேர்தல் 'பூத்' அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தொகுதியில் மொத்தம் 9 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைகளில் வைக்கப்பட்டு, அவை பூட்டி சீல் வைக்கப்படுகின்றன. பின்னர் வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

1 More update

Next Story