

ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் தனது பேரக்குழந்தையை பாட்டியே கொன்றார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அண்மையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில், அந்தக் குழந்தை திடீரென உயிரிழந்தது. குழந்தையின் கழுத்து மற்றும் மூக்குப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் இருப்பதை ஆஸ்பத்திரியின் நிர்வாகத்தினர் கண்டறிந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், குழந்தையின் சொந்த பாட்டியான தங்கமணி (வயது 47) என்பவரே குழந்தையைக் கழுத்தை நெரித்தும், மூக்கைப் பிடித்தும் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் தங்கமணியைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் குழந்தை என்பதால் இந்த கொடூரக் கொலை நடந்ததா அல்லது குடும்பத் தகராறு காரணமா என்ற பல கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.