ஈரோடு மாநகராட்சி சாலைகள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டின் பெரிய வரலாற்றுக்கான தொடக்கம் ஈரோடு மாவட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு மாநகராட்சி சாலைகள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப்பணிகள் தொடக்கவிழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு சோலாரில் உள்ள புதிய பஸ் நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 50 ஆயிரத்து 88 பேருக்கு ரூ.284 கோடியே 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ஈரோடு மாவட்டத்தில் ரூ.951 கோடியே 20 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 559 திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.133 கோடியே 66 லட்சம் மதிப்பில் 222 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஈரோடு மக்களை சந்திப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு சோகமும் உள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு எனக்குள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவு ஈரோடு மக்களுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பெரிய இழப்பு.

தந்தை பெரியார் நிகழ்த்தி காட்டிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை கேரளாவில் சிறப்பாக நடத்திக்காட்டியுள்ளோம். திராவிட மாடல் ஆட்சியை கேரள மக்கள் பாராட்டி வருகின்றனர். அதற்கு ஈரோட்டின் மண்ணின் மைந்தன் தந்தை பெரியார் தான் காரணம். பெரியார், அண்ணா, கலைஞர் இல்லாவிட்டால் திராவிட இயக்கமே இல்லை. தமிழ்நாட்டின் பெரிய வரலாற்றுக்கான தொடக்கம் ஈரோடு மாவட்டம். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலம் ஈரோட்டில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஐடி பார்க் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஈரோடு மாநகராட்சி அந்தியூர், கோபி, முடக்குறிச்சி சாலைகள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும். சத்தியமங்கலம், நம்பியூர், பவானிசாகர் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ரூ.12 கோடியில் மேம்படுத்தப்படும். வாடகை கட்டிடத்தில் இயங்கும் துணை சுகாதார நிலையங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டித் தரப்படும்.

உயர்கல்வித்துறையின் சிக்கநாயக்கர் கல்லூரியில் ரூ.10.75 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும். சென்னிமலை உள்ளிட்ட 50 கிராமங்களில் ரூ.15 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும். திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் சென்னிமலையில் அவரது நினைவு மண்டபம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.

வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடும் அரசு இது கிடையாது; தமிழ்நாட்டில் நடப்பது, சொன்னதை செய்யும் உங்கள் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு. பெண்களின் பொருளாதார விடுதலைக்காக மகளிர் உரிமைத் தொகை செயல்படுத்தபடுகிறது. மக்களைத் தேடி மருத்துவம், விவசாயிகளுக்கான பயிர்க்கடன், வங்கிக் கடன் மூலம் பலர் பயனடைந்துள்ளனர். பெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புலம்பிக் கொண்டே இருக்கிறார். திமுக அரசை மக்கள் பாராட்டி வருகின்றனர்; இதனால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலால் திமுக மீது பொய் குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி முன்வைக்கிறார். இது அவர் வகிக்கும் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு அழகல்ல. குற்றம் சாட்ட எதுவும் இல்லாமல் பொய் சொல்லக்கூடாது. காலி குடம் உருண்டால் சத்தம் அதிகமாக தான் வரும். மத்திய அரசை பார்த்து கீச்சுக் குரலில் கூட பேச முடியாத லட்சணத்தில் அதிமுக உள்ளது. செந்தில் காமெடி போல எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை திரும்ப திரும்ப சொல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com