

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஜீர் கள்ளி உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சர கங்களில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. இதில் காட்டு யானை அடிக்கடி தண்ணீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன. அவ்வாறு வெளியேறும் யானைகள் விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. சில நேரங்களில் தோட்டங்களில் காவலுக்கு இருக்கும் விவசாயிகளயும் தாக்குகின்றன.
இந்தநிலையில் நேற்று காலை ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு காட்டுயானை அருகே உள்ள ஆனந்தபுரம் கிராமத்துக்குள் புகுந்தது. யானையை கண்ட கிராம மக்கள் பீதியடைந்து உடனே ஜீர்கள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஊருக்குள் அங்கும் இங்கும் சுற்றிய யானை பின்னர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் சுற்றியது. இதற்கிடையே அங்கு வந்த வனத்துறையினர் விவசாயிகளுடன் சேர்ந்து பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானை விரட்ட தொடங்கினார்கள். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகே யானை வனப்பகுதிக்குள் சென்றது. வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்கு காட்டு யானைகள் நுழையாத வகையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.