

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், காட்டெருமைகள், புலிகள் போன்ற விலங்குகள் உள்ளன. இதில் யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து உணவு ஏதாவது உள்ளதா என தேடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை சாலையில் சுற்றித்திரிந்தது. மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை துரத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி இயக்கி அங்கிருந்து சென்றனர். அதன்பின்னர் யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்றது.