

மதுரை,
மதுரை விரகனூரில் உள்ள ஒரு மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாடு நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் மதுரை, நெல்லை, குமரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜி.கே.வாசன் கூறியதாவது:-
நடைபெற இருக்கிற உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் நிர்வாகிகள் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடைபெற்றது. தேர்தல் குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும். அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி கட்சிகளோடு இணைந்து 100 சதவீத வெற்றியை பெற போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்த அரசியல் மாநாட்டில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்ததை த.மா.கா. வரவேற்கிறது. உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை வரவேற்கிறோம். நதிநீர் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல் பாலாற்றில் தடுப்பணை கட்டும் திட்டம், முல்லை பெரியாறு அணை பிரச்சினைகள், தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதில் கர்நாடக அரசின் பிடிவாதம் இவற்றையெல்லாம் தீர்ப்பதற்கு தென்மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் கூட்டத்தை மத்திய அரசின் தலைமையில் கூட்டி நிரந்தர தீர்வு காண தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.