“தங்களின் பொதுத் தேவைக்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு” - ஐகோர்ட்டு மதுரைக்கிளை

அத்தியாவசிய தேவைகளுக்காக நடைபெறும் போராட்டங்களை சட்டவிரோதமாக கருத முடியாது என ஐகோர்ட்டு மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
“தங்களின் பொதுத் தேவைக்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு” - ஐகோர்ட்டு மதுரைக்கிளை
Published on

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள மனம்காத்தான் கிராமத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி, அந்த கிராமத்தினர் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி கயத்தாறு-தேவர்குளம் மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கயத்தாறு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் இறுதி அறிக்கை கோவில்பட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இறுதி அறிக்கையை ரத்து செய்யக்கோரி 8 பேர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் இந்த வழக்கில் இன்று உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், மனுதாரர்கள் தங்கள் கிராமத்திற்கான பொது சாலையை சீரமைக்கக் கோரி தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நடந்த போராட்டம் என்பதால் இதை சட்ட விரோதம் என்று கூற முடியாது. தங்களின் பொதுத் தேவைக்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் குடிநீர், உணவுப்பொருள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக நடைபெறும் போராட்டங்களை சட்டவிரோதமாக கருத முடியாது என ஐகோர்ட்டு ஏற்கனவே கூறியிருப்பதை நினைவுபடுத்திய நீதிபதி, கோவில்பட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com