

சென்னை
தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றார்.
நாமக்கலில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தின் முன்பு முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\
கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் அருகே நடந்த அ.தி.மு.க.வின் கவன ஈர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொரோனா தடுப்பு பணிகளில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டது என கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் வீட்டுக்கு முன் அ.தி.மு.க.வின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அண்ணே அண்ணே ஸ்டாலின் அண்ணே... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.