முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான 27 வழக்குகளின் நிலை என்ன என்பது குறித்து போலீஸ் தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை ஐகேர்ட்டில், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், "கரூரில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை தடுத்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தாக்க முயன்றதாக என் மீது பெய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்வதுடன், எனக்கு முன்ஜாமீனும் வழங்கவேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பேலீஸ் தரப்பில், "எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது இதுவரை 27 வழக்குகள் நிலுவையில் உள்ளது. குடிமராமத்து பணிகளுக்கான ஒப்பந்தம் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அந்தப் பணிகளை செய்ய விடாமல் தடுத்துள்ளார். அதிகாரிகளை தாக்கவும் முற்பட்டுள்ளார்" என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, "2022-ம் ஆண்டு மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரும் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் எப்படி முன்ஜாமீன் வழங்க முடியும்..? என்று கேள்வி எழுப்பினார். மேலும் முன்ஜாமீன் வழங்க முடியாது என்றும் கூறினார். பின்னர், 2022-ம் ஆண்டு முதல் மனுதாரர் மீது நிலுவையில் உள்ள 27 வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து பேலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 22-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com