பட்டினமருதூரில் அகழாய்வு பணிகள் தொடக்கம்

தமிழக அரசு 2025-2026-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பட்டினமருதூர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவைத் தொல்லியல் களமாக அறிவித்து, அகழாய்வு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்தது.
பட்டினமருதூரில் அகழாய்வு பணிகள் தொடக்கம்
Published on

தூத்துக்குடி அருகே பழங்கால தமிழர்களின் முக்கிய வணிக நகரமாகத் திகழ்ந்த பட்டினமருதூரில், தொல்லியல் அகழாய்வு பணிகள் முறைப்படி தொடங்கியுள்ளன. இது தமிழக தொல்லியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பட்டினமருதூர் பகுதி பண்டைய தமிழர்களின் வணிக மையமாக இருந்ததற்கான பல்வேறு ஆதாரங்களைத் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி சேகரித்தார். இந்த பகுதியில் செவ்வக வடிவக் கிணறுகள், முதுமக்கள் தாழிகள், பழமையான ஓடுகள், எழுத்து பொறிப்புகள், இரும்புக்கால பொருட்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் புதைபடிமங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், பட்டினமருதூரைத் தொல்லியல் களமாக அறிவிக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 2025-2026-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு பட்டினமருதூர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவைத் தொல்லியல் களமாக அறிவித்து, அகழாய்வு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்தது.

தொல்லியல் துறை இயக்குனர் அஜய்குமார் தலைமையில் நேற்று அகழாய்வு பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக, அறிவியல் ரீதியாக 20 மீட்டர் அகலம் மற்றும் 20 மீட்டர் நீளம் கொண்ட குழிகள் தோண்டுவதற்கான அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அகழாய்வுப் பணிகளை ஒருங்கிணைக்க அந்தப் பகுதியிலேயே தொல்லியல் துறை அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி கூறுகையில், மேற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களுக்கு, தற்போது தொடங்கப்பட்டுள்ள அகழாய்வு மூலம் கிடைக்கப்போகும் சான்றுகள் மேலும் வலுசேர்க்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com