கண்மாயில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதை தடுக்க வேண்டும்; தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு

சிவகிரி அருகே கண்மாயில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என தாலுகா அலுவலகத்தில் பா.ஜனதா கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கண்மாயில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதை தடுக்க வேண்டும்; தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு
Published on

சிவகிரி:

வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஒன்றிய தலைவர் சோழராஜன் தலைமையில் நேற்று சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், சிவகிரி சின்ன ஆவுடைப்பேரி குளத்தில் அரசு அனுமதியின்றி பல மாதங்களாக சட்டவிரோதமாக மண் அள்ளி வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து மக்களுக்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் இன்றி விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

எனவே சட்ட விரோதமாகவும், அரசு நிர்ணயித்த அளவை விட அதிகமாகவும் மண் அள்ளுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும். மேலும் நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகும் பட்சத்தில் வருகிற 21-ந்தேதி சிவகிரி தாலுகா அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளரும் மண்டல் பார்வையாளருமான ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com