காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன்

அரசுப் பள்ளியில் படிப்பது ஏழை எளிய குழந்தைகள் தானே என்ற அலட்சியமா? என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

காலை உணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது. தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அங்கமான காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தங்கள் மனதுக்கு நிறைவான இந்நன்னாளில், சமீபத்தில் தாராபுரம் அரசுப் பள்ளியிலும் திருவாரூர் பூனாயிருப்பு அரசுத் தொடக்கப் பள்ளியிலும் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்து கிடந்ததை, நியாபகப்படுத்த விரும்புகிறேன்.

இவை வெறும் எடுத்துக்காட்டுச் சம்பவங்களே. காலையுணவில் நடக்கும் அனைத்து குளறுபடிகளையும் வரிசைப்படுத்த வேண்டுமென்றால் சீனப் பெருஞ்சுவர் போதாது என்பதே உண்மை.

பிஞ்சுக் குழந்தைகளின் பசியாற்ற வேண்டிய காலையுணவில் புழு முதல் பல்லி வரை கிடக்கிறதே, அது விடியா அரசின் விழிகளுக்குப் புலனாகவில்லையா? ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டிய உணவை நெடுந்தூரத்தில் இருந்து சமைத்துக் கொண்டு வந்து ஊசிப்போன உணவாக மாறவிடுவது தான் திராவிட மாடலின் சாதனையா?

உணவு எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம், அரசுப் பள்ளியில் படிப்பது ஏழை எளிய குழந்தைகள் தானே என்ற அலட்சியமா? அல்லது, போலி விளம்பரங்களின் மூலம் காலையுணவில் நடக்கும் குளறுபடிகளை மறைத்துவிடலாம் என்ற எண்ணமா? . என தெரிவித்துள்ளார் . 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com