குழந்தைகள் பாதுகாப்புக்காக வல்லுனர் குழு; முதல்-அமைச்சரிடம், லதா ரஜினிகாந்த் கோரிக்கை

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், லதா ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்புக்காக வல்லுனர் குழு; முதல்-அமைச்சரிடம், லதா ரஜினிகாந்த் கோரிக்கை
Published on

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. இருந்தாலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அவற்றில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ மாநில அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டது. ஆழ்துளை கிணறு மட்டுமல்ல, இன்னும் பல ஆபத்துகள் குழந்தைகளுக்கு உள்ளது. குழந்தைகள் நம்மை நம்பித்தான் உள்ளனர். ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை அவர்களை கண்காணிக்க வேண்டியது நமது கடமை.

முதியவர்களுக்காக அரசில் பல்வேறு துறைகள் உள்ளன. ஆனால் குழந்தைகளுக்கென ஒரு துறை மட்டும் இருந்தால் போதாது. மருத்துவம், கல்வி, சமூக பாதுகாப்பு ஆகியவை அடங்கிய குழு தேவைப்படுகிறது.

எனவே அவர்களை பாதுகாக்க மாநில அளவில் மருத்துவர்கள், வக்கீல்கள், அரசு அதிகாரிகள் என பல்துறை நிபுணர்கள், வல்லுனர்கள் அடங்கிய குழுவை உருவாக்குவது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com