

சென்னை,
மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கல்வியில் மும்மொழி கொள்கையை திணிப்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு முதல் அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். மும்மொழிக்கொள்கைக்கு தமிழகத்தில் இடம் இல்லை. இருமொழிக்கொள்கை மட்டுமே தொடரும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய இந்த குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.