விருதுநகர் பட்டாசு குடோனில் வெடி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு

90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர் பட்டாசு குடோனில் வெடி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Published on

சிவகாசி,

சட்டவிரோதமாக செயல்பட்ட குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பட்டாசு குடோன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக தகர கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கம் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

கரும்புகை

பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், விண்ணை முட்டும் அளவிற்கு அடர்ந்த கரும்புகை வெளியேறியது. இந்த விபத்தின் காரணமாக சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு பலத்த அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

4 பேர் பலி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், போலீசார், தண்ணீரை கொண்டு பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் குடோனில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு

வெடி விபத்தில் ஏற்கனவே 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 90 சதவீத தீக்காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com