முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
Published on

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது அடுத்த மாதம் 15-ந் தேதி அன்று நடைபெறும் சுகந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

இந்த விருது தொடர்பாக தகுதிகளாக 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண் / பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 1.4.2022 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மார்ச் 31, 2023 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

1.4.2022 முதல் 31.3.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்பட கூடியதாகவும், அளவிட கூடியததாகவும் இருத்தல் வேண்டும்.

மத்திய / மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் / கல்லூரிகள் / பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

20-ந்தேதி

விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 20-ந் தேதி மாலை 4 மணி ஆகும்.

விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பித்த தங்களின் சாதனைப் பற்றிய பத்திரிகை செய்திகள், சான்றிதழ்கள், புகைப்படங்கள் மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து ஆவணங்களையும் 3 புத்தகங்களாக தயார் செய்து காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் இந்த மாதம் 21-ந்தேதி சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சீபுரம், அலுவலகத்திலோ (அ) தொலைபேசி எண். 7401703481 (அ) 044-27222628 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com