

சென்னை,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் தலா 3 குழுக்கள் வீதம் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த குழுக்களில் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனர். கடந்த 31 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி(நேற்று) வரை முக கவசம் அணியாத 2,608 பேரிடம் இருந்து ரூ.5.48 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் அதிகமாக மக்கள் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் முககவசம் அணியாத 1,022 பேரிடம் இருந்து ரூ.2.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.