அஞ்சலகங்களில் ஆதார் மூலம் வங்கிக் கணக்கில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம்

அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் போஸ்ட் பேமென்ட் வங்கி மூலமாக விபத்து காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அஞ்சலகங்களில் ஆதார் மூலம் வங்கிக் கணக்கில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம்
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் அட்டை கொண்டு, எந்த வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் எடுத்துக் கொள்ளும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் போஸ்ட் பேமென்ட் வங்கி மூலமாக விபத்து காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் மக்கள் இதில் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தில் வெறும் ரூ.700 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு கிடைக்கிறது.

இந்தத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் ஒருவருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளோம். இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், அஞ்சலகங்களில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்கி விபத்து காப்பீட்டை பெறலாம்.

அஞ்சலகத்தை பொருத்த அளவில் ஒரே குடையின் கீழ் பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாஸ்போர்ட் சேவை, பிசினஸ் போஸ்ட், ஆதார் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதார் சேவை மையங்கள் 30 அஞ்சலகங்களில் செயல்பட்டு வருகின்றன.

ஆதார் அட்டை கொண்டு, எந்த வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் எடுத்துக் கொள்ளும் சேவையும் அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தபால்காரரிடம் நேரடியாகவும் ஆதார் அட்டை கொண்டு, வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com