

சென்னை,
சென்னையை சேர்ந்தவர் அந்தோணி ராபின் (வயது 26). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ஒரு கியாஸ் குடோனில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அம்மு (வயது 22) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் பழகி வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்த நிலையில் தற்போது அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அம்முவுக்கும் அவரது சகோதரி கணவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதனை அந்தோணி ராபின் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி வீட்டு முன்பு படுத்திருந்த அந்தோணி ராபின் மீது பெட்ரோலை ஊற்றி அம்மு தீ வைத்து எரித்துள்ளார். அப்போது தீப்பிடித்து எரிந்ததும் அவர் தெருவில் ஓடும் காட்சிகளும் அப்போது விரட்டி விரட்டி மீண்டும் பெட்ரோல் உடலில் ஊற்றும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த பகுதியினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு வந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அந்தோணி ராபின் சாவுக்கு காரணமான அவரது மனைவி மற்றும் அக்காள் கணவரை கைது செய்ய வேண்டும் அப்போது தான் உடலை வாங்குவோம் என்று கூறி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.