போலி ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி: நெல்லை காவல்துறை தகவல்

உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான சமூகவலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
போலி ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி: நெல்லை காவல்துறை தகவல்
Published on

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே பெருகி வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இருந்தே பொருட்களை வாங்க பொது மக்கள் விருப்பம் காட்டுகின்றனர். ஆனால் அதில் நடக்கும் மோசடிகளை மறந்துவிடுகின்றனர். இதனை தடுக்க இணைய வழி காவல் துறையினர் தொடர்ச்சியான அறிவுரை விடுத்தும், மீண்டும் போலியான ஆன்லைன் பட்டாசு விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி பணத்தை இழந்து வருகின்றனர்.

உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான சமூகவலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே பொதுமக்கள் இணையத்தில் எந்த பொருளை வாங்கும் முன்பும் அதனுடைய உண்மை தன்மையையும் அதை விற்பவருடைய முழு விபரங்களையும் நன்கு சோதித்து பார்த்தபின் வாங்க வேண்டும் என்றும், இணைய வழி விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1930 மற்றும் மின்னஞ்சல்: www.cybercrime.gov.in மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com