

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பாரதியார் தெருவைச் சேர்ந்த சுப்பரமணியன் மகன் சண்முகவேல் (வயது 54). இவரது உடன் பிறந்த 4 சகோதரர்களும் ஏற்கனவே மனநிலை பாதிப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால் தனது முதிய பெற்றோரை அரவணைத்து கவனித்துக் கொள்வதற்காக சண்முகவேல் திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களுடனேயே வசித்து வந்தார்.
தனி ஆளாக பெற்றோரைப் பராமரித்து வந்த நிலையில், நேற்று காலை சண்முகவேல் தனது வீட்டின் சமையலறையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலை மகன் மாடசாமி(35). இவர் கடந்த சில காலமாக தனது குடும்பத்தைப் பிரிந்து, வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். மாடசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் அவர் அடிக்கடி மதுபோதையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாடசாமி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.