

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சவேரியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செபஸ்தியான் மகன் லூகாஸ்(வயது 52). விவசாயி. இவர் சொந்த வேலை காரணமாக தா.பழூர் சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் சவேரியார் பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். கோட்டியால் கிராமத்திற்கும் நால்ரோடுக்கும் இடைப்பட்ட பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் சாலையின் ஓரத்தில் நிலக்கடலை காயவைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் வரும்போது எதிர்பாராத விதமாக லூகாஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் சாலையில் தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லூக்காசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.