கம்மாபுரம் அருகேமின்கம்பியில் சிக்கி விவசாயி சாவுஉடலை எடுக்க விடமால் போலீசாரை தடுத்து நிறுத்தி உறவினர்கள் போராட்டம்

கம்மாபுரம் அருகே மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார். அவரது உடலை எடுக்க விடாமல் போலீசாரை தடுத்து நிறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கம்மாபுரம் அருகேமின்கம்பியில் சிக்கி விவசாயி சாவுஉடலை எடுக்க விடமால் போலீசாரை தடுத்து நிறுத்தி உறவினர்கள் போராட்டம்
Published on

கம்மாபுரம், 

சேத்தியாத்தோப்பு அடுத்த அகரஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டசோழன் (வயது 38). விவசாயி. இவர் நேற்று காலை கம்மாபுரம் அடுத்த பொட்டவெளி கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்பவரது கரும்பு வயலில், தனது கால்நடைகளுக்கு பசுந்தீவனம் சேகரிக்க சென்றார்.

அப்போது எதிர்பாராதவிமாக, கரும்பு வயலில் தாழ்வாக சென்ற மின்கம்பி, மணிகண்டசோழன் கழுத்தில் சிக்கி, மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

போலீசாருக்கு எதிர்ப்பு

இதுபற்றி அறிந்த கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது மணிகண்டசோழனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரது சடலத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

மின்துறையினர் அலட்சிய போக்கால் தான், உயிரிழப்பு நேர்ந்துள்ளது. இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அப்போது தான் உடலை எடுத்து செல்ல விடுவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

பின்னர், முகந்தரியான்குப்பம் துணைமின் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அரசு சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

இதன்பின்னர், அவர்கள், மணிகண்ட சோழனின் உடலை எடுத்து செல்ல அனுமதித்தனர். பின்னர், கம்மாபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மணிகண்டசோழனின் மனைவி கமலவள்ளி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com