மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பென்னாத்தூரில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Published on

பென்னாத்தூர் அருகில் உள்ள கேசவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 55), விவசாயி. இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்தார். மாடுகளுக்காக வீட்டின் அருகிலேயே இரும்புக்கம்பி, தகரத்தாலான கொட்டகை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் மழைப் பெய்தது. அப்போது மின்கம்பி அறுந்து அவரின் மாட்டுக் கொட்டகையில் விழுந்தது. அதில் மாட்டுக் கொட்டகை இரும்புத்தகடு மற்றும் கம்பி தூண்களில் மின்சாரம் பாய்ந்திருந்தது. அப்போது முருகேசன் மாலை 6.30 மணிக்கு மாடுகளை கட்டுவதற்காக கொட்டகைக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள இரும்புக்கம்பியை தொட்டபோது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. முருகேசன் நீண்ட நேரமாக கம்பியை பிடித்துக் கொண்டு நிற்பதாக அவரின் மனைவி நினைத்துக் கொண்டார். நீண்டநேரம் அவர் அப்படியே நின்றதால் சந்தேகம் அடைந்த மனைவி முருகேசன் அருகில் சென்று அவரை தொட்டார்.

அப்போது தான் கணவர் மீது மின்சாரம் பாய்ந்திருப்பதை அவர் உணர்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியாடு சுயநினைவின்றி இருந்த முருகேசனை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், முருகேசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com