தர்மபுரியில் மாடு மேய்க்க சென்ற விவசாயி யானை தாக்கி பலி

தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே விவசாயி ஒருவர் ஏமனூர் வனப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்றார்.
தர்மபுரியில் மாடு மேய்க்க சென்ற விவசாயி யானை தாக்கி பலி
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள நாகமரை ஊராட்சி ஏமனூரை சேர்ந்த காத்தப்பன் (வயது 60), விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் ஏமனூர் வனப்பகுதியில் மாடு மேய்க்க சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை வனப்பகுதிக்கு சென்று தேடியும் காணவில்லை. ஆனால் மாடுகள் மட்டும் வீட்டுக்கு வந்தன. இந்த நிலையில் நேற்று காத்தப்பனின் குடும்பத்தினர் வனப்பகுதிக்கு சென்று அவரை தேடினர். அப்போது வனப்பகுதியில் காத்தப்பன் யானை தாக்கியதில் உடலில் பலத்த ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஏரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காத்தப்பனின் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com