பரமத்திவேலூர் சந்தையில்வெற்றிலை விலை உயர்வுவிவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர் சந்தையில்வெற்றிலை விலை உயர்வுவிவசாயிகள் மகிழ்ச்சி
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் உள்ள சந்தையில் வெற்றிலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெற்றிலை சாகுபடி

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். இங்கு பயிரிடப்படும் வெற்றிலைகள் பரமத்திவேலூரில் உள்ள வெற்றிலை ஏல சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இந்த வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

விலை உயர்வு

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ரூ.8 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ரூ.3 ஆயிரத்திற்கும், வெள்ளை கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ரூ.3 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.1,500-க்கும் ஏலம் போனது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ரூ.2 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.

வெற்றிலை வரத்து குறைந்தும், முகூர்த்தங்கள் அதிகளவில் வர உள்ளதால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் வெற்றிலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com