

கிருஷ்ணகிரி,
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 1,003 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் பாதுகாப்பு கருதி நொடிக்கு 1,060 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் ரசாயண நுரை பொங்கி எழுந்து, தென்பெண்ணை ஆற்றில் மிதந்து செல்கிறது. இதனால் விளைநிலங்கள் பாழாகும் ஆபத்து இருப்பதாக கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், கர்நாடக பகுதிகளில் இருந்து ஆற்றில் ரசாயணம் கலந்து விடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.