பருத்தி விளைந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தி விளைந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பருத்தி விளைந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருத்தி நன்றாக விளைந்ததோடு மட்டுமல்லாது வரலாறு காணாத விலை போனது. இதுவரை இல்லாத அளவிற்கு கிலோ ரூ.120 என்ற விலைக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு விவசாயிகளின் நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் பருத்தி நன்றாக விளைந்தபோதிலும் உரிய விலை கிடைக்கவில்லை.இதளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொன்னக்கனேரி மைக்கேல் கூறும் போது:-

கடந்த ஆண்டு பருத்தி கிலோ ரூ.120 வரை விலை கிடைத்த நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் ரூ.69 வரை தான் விலை கிடைத்தது. இதன் பின்னர் இந்த விலையானது மேலும் குறைந்து தற்போது ரூ.45 முதல் 50 வரை தான் விலை போகிறது. இதனால் நாங்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறோம். பருத்தி பறிப்பதற்கு கூலி ஒரு நபருக்கு ரூ.350 கொடுக்க வேண்டிய நிலையில் 10 கிலோதான் பறிக்க முடியும். அப்படி பார்த்தால் பறிக்கும் 10 கிலோ பருத்திக்கு ரூ.450 மட்டும் கிடைத்தால் இதுநாள் வரை பட்ட கஷ்டத்திற்கு என்ன விலை கிடைக்கும். எனவே, எங்களின் நிலை கருதி அரசே பருத்திக்கு விலை நிர்ணயம் செய்து பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com