

சென்னை
தமிழக விவசாயிகளின் நலனிற்காக பயிர் கடன் ரூ.17,000 கோடியும், இலவச மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழக சட்டசபையில், 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, காலை 9.30 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
இதனை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துறை சார்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர்.
வேளாண் பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் ஆசி பெற்றார். இதன்பின்னர் சபாநாயகர் பிரபாகர் அவைக்கு வருகை தந்ததும், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தந்தனர். அவையில் திருக்குறள் வாசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.
அவர் பேசும்போது, த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விவசாய குடும்பங்களின் மகனாக இருப்பதால் இலவச மும்முனை மின்சாரத்தை தொடர முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளார். வேளாண்மையை பெருக்க பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம் என கூறினார்.
ஓர் அரசு வல்லரசாகும் முன்பு விவசாயிகளின் அரசாக மாற வேண்டும் என்பதே முதல்வரின் கொள்கை என்று அவர் பேசியுள்ளார். தொடர்ந்து பட்ஜெட்டில் விவசாயிகள் பயன் பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை அறிவித்து அவர் பேசினார்.
அதில், தமிழக விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு பயிர் கடன் ரூ.17,000 கோடி
உயிர்ம உர பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை.
உழவர் ஐ.டி. பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டைகள் வழங்கப்படும்.
விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம் ரூ.5.20 கோடி
ஏ.ஐ. அடிப்படையிலான உழவர் செயலி ரூ.2 கோடி
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் நல அட்டை
4.75 லட்சம் விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி இயக்கம்
24,000 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள்
1,000 விவசாயிகளுக்கு மானியத்தில் சூரிய பம்புசெட்
100 விவசாயிகளுக்கு 50% மானியத்தில் கதிரடிக்கும் களம் உள்ளிட்டவற்றை அறிவித்து உள்ளார்.