

சென்னை,
சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், உடல்நலக்குறைவு காரணமாக சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனைக்கு சென்று வருவதற்கு வசதியாக, கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் அப்பெண் தங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து அந்த பெண் அலறியடித்து எழுந்ததோடு, கத்தி கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். இதனிடையே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து, அண்ணா நகரைச் சேர்ந்த கேசப் குமார் போகடி(வயது 29) என்ற வாலிபரை அதிரடியாக கைது செய்தனர். அந்த வாலிபர் பாஸ்ட் புட் கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று தனது நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நமச்சிவாயபுரம் பகுதிக்கு சென்ற கேசப் குமார், நண்பரின் பக்கத்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கேசப் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.