

சேலம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பல்பாக்கி கிராமம் அருந்ததியர் காலனியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மயான வசதி இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் மயான வசதி கேட்டு கலெக்டர் அலுவலகம் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் மயான வசதி கேட்டு மனித உரிமைகள் கழகம் சார்பில் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொருளாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பார்த்திபன், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். போராட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.