வேலைக்கு போகாததை கண்டித்த தந்தை... ஆத்திரத்தில் மகன் செய்த அதிர்ச்சி செயல்

மதுபோதைக்கு அடிமையான சக்திவேல் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கைது
Published on

வேலூர்,

வேலைக்கு செல்லாததை தட்டிக்கேட்டதால் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

தகராறு

வேலூர் மாவட்டம், சலவன்பேட்டை, அம்மணாங்குட்டை ரோட்டை சேர்ந்தவர் சந்திரன் (வயது 70). இவரது மகன் சக்திவேல் (42). இருவரும் தச்சுத்தொழிலாளிகள். சக்திவேலுக்கு 2 மனைவிகள். மதுபோதைக்கு அடிமையான சக்திவேல் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் 2 மனைவிகளும் அவரை விட்டு பிரிந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மதுபோதையில் சக்திவேல் வீட்டுக்கு வந்தார். அப்போது சந்திரன், மகனிடம் ஏன் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றித்திரிகிறாய் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல், சந்திரனை கத்தியால் வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் தந்தையை மகன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com