வாடகை வீடு எடுத்து தங்கி கள்ளநோட்டு அச்சடித்த தந்தை, மகன் கைது

செங்கல்பட்டு அருகே வாடகை வீடு எடுத்து தங்கி கள்ளநோட்டு அச்சடித்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
வாடகை வீடு எடுத்து தங்கி கள்ளநோட்டு அச்சடித்த தந்தை, மகன் கைது
Published on

சென்னை,

சென்னையை சேர்ந்தவர் ரகு. இவர் செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பகுதியை சேர்ந்த கனிமொழி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதன் மூலம் அங்கு அறிமுகமான செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பகுதியை சேர்ந்த தந்தை, மகனான ராஜ் (வயது 50), எபினேசர் (26) ஆகியோருடன் சேர்ந்து தொழில் செய்ய திட்டமிட்டார்.

இதையடுத்து செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து 3 பேரும் தங்கி இருந்தனர்.

கள்ள நோட்டுகள்

இந்த நிலையில் கடந்த 6 மாதமாக வீட்டு வாடகை கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் நேற்று திடீரென வீட்டை காலி செய்ய முயன்றனர். வீட்டில் கள்ளநோட்டுகள் மற்றும் அச்சடிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் பாபு செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது ரூ.500, ரூ.100 கள்ள நோட்டுக்கள் மற்றும் அச்சடிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டர் இருப்பதை கண்டறிந்தனர்.

கைது

அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராஜ், அவரது மகன் எபினேசர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள ரகுவை தனிப்படை போலீசார வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com