ஆடல் பாடல் நிகழ்ச்சியால் இருதரப்பினரிடையே தகராறு; காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஊர் பிரமுகர்கள் போலீஸ் நிலையம் முற்றுகை; 62 பேர் மீது வழக்கு

கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் தகராறு ஏற்பட்டது. இதனால் ஒரு பிரிவை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றொரு தரப்பினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆடல் பாடல் நிகழ்ச்சியால் இருதரப்பினரிடையே தகராறு; காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஊர் பிரமுகர்கள் போலீஸ் நிலையம் முற்றுகை; 62 பேர் மீது வழக்கு
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் காலனியில் கடந்த 12-ந் தேதி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி இரவு 10 மணிக்கு ஆடல்-பாடல் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இது பற்றி ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில் திருவிழா நடத்தக்கூடாது என்று ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து விழாக்குழுவினர் போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் பேசி, ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களை திரும்ப வாங்கிக்கொண்டனர். ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக ரமேஷ்தான் போலீசுக்கு தகவல் கூறியதாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காலனி பகுதியை சேர்ந்தவர்கள், ரமேஷ் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். மேலும் திருவிழா நடத்துவதற்கு ரூ.2 லட்சம் செலவாகி உள்ளதாகவும், அதனை வழங்குமாறும் கூறி வாக்குவாதம் செய்தனர். இதுபற்றி அறிந்ததும் ரமேசுக்கு ஆதரவாக கிராம மக்கள் திரண்டனர். இதனால் காலனி மக்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதற்கிடையில் காலனியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர், நேற்று காலை 8 மணி அளவில் கிராமத்துக்கு வந்து சிறியவர்கள் செய்த பிரச்சினைக்கு ஊரில் பிரச்சினை வேண்டாம் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.

இதற்கு காலனியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது.

இதை பார்த்த போலீசார், ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த 3 பேரை பிடித்து சென்றனர். இது பற்றி அறிந்ததும் கிராம மக்கள் ஒன்று திரண்டு, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், ஆகியோர் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த சம்பம் தொடர்பாக ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் காலனியை சேர்ந்த 54 பேர் மீதும், காலனியை சேர்ந்த குமரன் கொடுத்த புகாரின் பேரில் 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கோகுல்ராஜ், சீதாராமன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com