

மதுரை,
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் லாவண்யா (24 வயது). மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து பட்டம் பெற்ற நிலையில், தொடர்ந்து முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்தார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திவாகரன் என்பவருடன் திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த அவர், நீண்டநேரம் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.