தலை துண்டித்து பெண் படுகொலை தொழிலாளி போலீசில் சரண்

பட்டப்பகலில் ரேஷன் கடைக்கு சென்று திரும்பிய பெண் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
தலை துண்டித்து பெண் படுகொலை தொழிலாளி போலீசில் சரண்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி அம்மாள் (வயது 62). கணவர் இறந்து விட்டார். குழந்தைகளும் இல்லை. தனியாக வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் தொழிலாளியான முருகன் (42) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பாப்பாத்தி அம்மாள், முருகனுக்கு சித்தி உறவின் முறை என்று கூறப்படுகிறது.

இதனால் பாப்பாத்தி அம்மாள் பெயரில் உள்ள வீட்டை முருகன் தனது பெயருக்கு எழுதி தரும்படி கேட்டு வந்தார். ஆனால், அவர் எழுதிக் கொடுக்க மறுத்து விட்டார்.

தலை துண்டித்து கொலை

நேற்று காலையில் முருகனின் மனைவி மகாலட்சுமி மற்றும் தாயார் வீடு தொடர்பாக பாப்பாத்தி அம்மாளிடம் பேசினார்கள். ஆனால் 2 பேரையும் அவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த முருகன் ஆத்திரம் அடைந்தார்.

அப்போது ரேஷன் கடையில் இருந்து திரும்பிய பாப்பாத்தி அம்மாளை தான் மறைத்து வைத்து இருந்த கோடாரியால் முருகன் சரமாரியாக கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் தலை துண்டானது.

ஆத்திரம் தீராத முருகன் துண்டான தலையை எடுத்து பக்கத்து தெருவில் உள்ள பாப்பாத்தி அம்மாள் அண்ணன் வீட்டின் முன்பு வைத்துவிட்டுச் சென்றார். பின்னர் முருகன் புளியரை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இந்த கொடூரக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com