

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அமராவதி என்ற பெண், நுரையீரல் பாதிப்பு காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று உயிரிழந்தார்.
மின்தடை காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர்கள் செயலிழந்ததில், அந்த நோயாளி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் கூறுகையில், காச நோயால் அமராவதியின் நுரையீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், 7 நிமிடத்தில் மின்தடை சரி செய்யப்பட்டதாகவும் கூறினார். அமராவதி போன்று வென்டிலேட்டர் வைக்கப்பட்ட 4 பேர் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.