கள்ளக்காதலன் பற்றி கணவருக்கு கடிதம் அனுப்பிவிட்டு பெண் போலீஸ் தற்கொலை - பரபரப்பு தகவல்கள்

கருத்து வேறுபாடு காரணமாக கணவன் முகிலனும், பெண் போலீஸ் சோனியாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
கள்ளக்காதலன் பற்றி கணவருக்கு கடிதம் அனுப்பிவிட்டு பெண் போலீஸ் தற்கொலை - பரபரப்பு தகவல்கள்
Published on

கடலூர்,

கடலூர் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்தவர் சோனியா(வயது 26). இவர் சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவரும், கார் டிரைவரான கீழ்கவரப்பட்டை சேர்ந்த முகிலன் (27) என்பவரும் காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார்.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முகிலனும், சோனியாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலும் முகிலனுடன் அவரது மகள் இருந்தாள். இதற்கிடையே சோனியா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கொங்கராயனூருக்கு வந்தார். பின்னர் 4 நாட்களுக்கு முன்பு முகிலனை செல்போனில் தொடர்பு கொண்டு மகளை பார்க்க வேண்டும் என கூறினார்.

இதையடுத்து முகிலன், சோனியா ஆகியோர் தங்கள் மகளுடன் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்து சுற்றி பார்த்துவிட்டு சென்றனர். இந்நிலையில் கடந்த 1-ந்தேதி காலை சோனியா, முகிலனை செல்போனில் தொடர்பு கொண்டு தான் விஷம் குடித்துவிட்டதாகவும், மகளை நன்றாக பார்த்துக் கொள்ளும்படியும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதை கேட்டு பதறிய முகிலன், உறவினர்களுடன் கொங்கராயனூருக்கு விரைந்து வந்து சோனியாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சோனியா பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சோனியா தனது கையால் எழுதிய கடிதத்தை செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை வாட்ஸ்-அப் மூலம் கணவர் முகிலனுக்கு அனுப்பி உள்ளார். அதில், சென்னை ஆவடியில் பணிபுரிந்த எனக்கு, அங்குள்ள ஒரு போலீஸ்காரருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் இருவரும் நெருங்கி பழகியதில், நான் 3 மாத கர்ப்பமானேன்.

இதுபற்றி அறிந்த அந்த நபர் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்றும், கணவர் முகிலனிடமிருந்து விவாகரத்து பெற வேண்டும் எனவும், கர்ப்பத்தை கலைத்தால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் மிரட்டினார். இதுதொடர்பாக புகார் அளித்தபோது, உயர் அதிகாரிகள் என்னை மட்டுமே ஒருதலைபட்சமாக விசாரணை செய்தனர்.

மேலும் அதிகளவில் பணிச்சுமை வழங்கினர். இந்நிலையில் எனது கர்ப்பம் திடீரென கலைந்துவிட்டது. இதனால் விடுமுறையில் வீட்டுக்கு வந்த நான், அந்த போலீஸ்காரர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதால் மனஉளைச்சலில் இருந்து வந்தேன். எனது சாவுக்கு காரணம் அந்த போலீஸ்காரர் மட்டுமே. மேலும் எனது குடும்பத்தினர், கணவர் மற்றும் மகள் யாரையும் விசாரிக்க வேண்டாம். இதுவே எனது மரண வாக்குமூலம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து முகிலன், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சோனியாவின் கள்ளக்காதலனான சென்னை ஆவடி ஆயுதப்படை போலீஸ்காரரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிபாளையத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜு (28) மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com