ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு சிறை

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம், லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார்.
ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு சிறை
Published on

திருச்சி,

கோவை மாவட்டம் உருமண்டம் பாளையத்தில் வசித்து வந்தவர் ஆறுமுகம். இவருடைய இருசக்கர வாகனம் திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வடுகப்பட்டிக்கும், பொய்கைப்பட்டிக்கும் இடையே விபத்துக்குள்ளானது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்பேரில் ஆறுமுகம் மீது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 28.10.2009 அன்று மணப்பாறை போலீஸ் நிலையத்துக்கு சென்ற ஆறுமுகம், அங்கு பணியில் இருந்த அப்போதைய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாத்தியை சந்தித்துள்ளார். அவர் ஆறுமுகத்திடம், உன் மீது விபத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உன்னை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். சிறையில் அடைக்காமல், காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.1,500 லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம், மறுநாள் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் 30.10.2009 அன்று காலை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆறுமுகத்திடம் போலீசார் கொடுத்து அனுப்பினர். லஞ்சப்பணம் ரூ.1.500-ஐ சப்-இன்ஸ்பெக்டர் ராஜாத்தி வாங்கியபோது, அவரை கையும், களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி புவியரசு முன்னிலையில் நடை பெற்று வந்தது.

போலீசார் தரப்பில் அரசு வக்கீல் கோபிக்கிருஷ்ணன் ஆஜரானார். இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜாத்தி மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com