வண்டலூர் பூங்காவில் பெண் வெள்ளை புலி உயிரிழந்தது

வண்டலூர் பூங்காவில் பெண் வெள்ளை புலி உடல்நலக்குறைவால் பரிதாபமாக இறந்தது.
வண்டலூர் பூங்காவில் பெண் வெள்ளை புலி உயிரிழந்தது
Published on

வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,300-க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகளை பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 வயது உடைய ஆகான்ஷா என்ற பெண் வெள்ளை புலி கடந்த 2 வாரங்களாக அட்டாக்ஸி என்ற நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக வெள்ளை புலியின் கால் தசைகளில் பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் ஆகான்ஷா நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளானது. இதையடுத்து பூங்கா டாக்டர்கள், சென்னை கால்நடை மருத்துவ பல்கலை கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினரின் ஆலோசனைப்படி தொடர்ந்து பெண் வெள்ளை புலிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

வெள்ளை புலி உயிரிழப்பு

இருந்தபோதும் கடந்த 2 நாட்களாக உணவு கூட உண்ண முடியாமல் மிகவும் மோசமான நிலையில் வெள்ளை புலி அவதிக்குள்ளாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதனுடைய இருப்பிட கூண்டிலேயே ஆகான்ஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து பூங்கா டாக்டர்கள் இறந்துபோன பெண் வெள்ளை புலியின் உடலை தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து பூங்கா வளாகத்தில் உள்ள நவீன மயானத்தில் எரியூட்டப்பட்டது. தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் 12 வெள்ளை புலிகள் உள்ளன. ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி பீஷ்மர் என்ற 17 வயதுடைய ஆண் வெள்ளை புலி இதே போல திடீரென்று நோய் வாய்ப்பட்டு இறந்தது. மேலும் பூங்காவில் கடந்த சில ஆண்டுகளாக நீலா, கவிதா, பத்மநாபன் ஆகிய சிங்கங்களும், ஒரு சிறுத்தை உள்ளிட்ட விலங்கும் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பூங்காவில் திடீரென நோய்வாய்ப்பட்டு 13 வயது உடைய வெள்ளை புலி இறந்து போனதால் பூங்காவில் தற்போது உள்ள வெள்ளை புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கிய விலங்குகளின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து 24 மணி நேரமும் பூங்கா டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com