அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா

தர்மபுரி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா
Published on

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாரியம்மன் கோவில்

நல்லம்பள்ளி அருகே மிட்டாதின்னஅள்ளி கிராமத்தில் பழையூர் மகாசக்தி மாரியம்மன், பூலா மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சி மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து காண்டு அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாவிளக்கு ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

தர்மபுரி

தர்மபுரி கடைவீதி முனியப்ப செட்டி தெருவில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கூழ் ஊற்றுதல் மற்றும் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று மாவிளக்கு எடுக்கும் விழா நடைபெற்றது.

இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சக்தி கரகம், பூங்கரகம் மற்றும் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து வழிபட்டனர். பின்னர் அம்மன் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

காரிமங்கலம்

காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி கூழ் ஊற்றும் நிகழ்ச்சி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூலாம்பட்டி ஆற்றங்கரையில் இருந்து பெண்கள் மற்றும் பக்தர்கள் மாவிளக்கு மற்றும் கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாரண்டஅள்ளி

மாரண்டஅள்ளி இ.பி. காலனியில் உள்ளகோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கங்கை பூஜை, பால்குடம் எடுத்தல் மற்றும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, கூழ் ஊற்றுதல் மற்றும் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் மற்றும் ஊர் மண்டு மாரியம்மன், கோட்டை மாரியம்மனுக்கும், கோட்டை முனியப்பனுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாலக்கோடு

பாலக்கோடு அருகே வெள்ளிசந்தையில் உள்ள படவட்ட மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து கங்கா பூஜை, பொங்கல் வைத்தல், கூழ் ஊற்றுதல், மாவிளக்கு ஊர்வலம், பூங்கரகம், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com