அம்மன் கோவில்களில் நேற்று ஆடி வெள்ளி விழா

உடுமலை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று ஆடி வெள்ளி விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Published on

உடுமலை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று ஆடி வெள்ளி விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆடி வெள்ளி

பல்வேறு சிறப்புகள், பெருமைகள் வாய்ந்த ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நேற்று பக்தர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. உடுமலையின் காவல் தெய்வமான மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், மஞ்சள், விபூதி, அபிஷேகம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து மாரியம்மன் சூலத்தேவருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். மேலும் பலிபீடம் மற்றும் திரிசூலத்திற்கு எலுமிச்சைகனி சாற்றியும் வழிபட்டனர். அத்துடன் ஆடி மாத சிறப்பாக கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குத்துவிளக்கு பூஜை

இதேபோன்று சிவசக்திகாலனி ராஜகாளியம்மன் கோவில் மற்றும் கணபதிபாளையம் உச்சி மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

பெண்கள் திரளானோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் சமேத ராஜமன்னார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையடுத்து ஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

உடுமலை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனால் கோவில்கள் விழாக்கோலம் பூண்டதுடன் பக்தர்கள் கூட்டமும் அதிக அளவில் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com