ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் சிசு அகற்றம்

வேலூர் அருகே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் கர்ப்பிணி பெண்ணுக்கு கருச்சிதைவு அடைந்தது.
ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் சிசு அகற்றம்
Published on

வேலூர்,

கடந்த 6-ம் தேதி திருப்பூரில் இருந்து சித்தூருக்கு ரெயிலில் பயணித்த 36 வயதுடைய 4 மாத கர்ப்பிணி பெண், ஹேமராஜ் என்பவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த அவர், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சூழலில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்து நான்கு மாத சிசு கடந்த 8-ம் தேதி உயிரிழந்தது. இதனை தொடர்ந்து அவர் உயர் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு வயிற்றில் உயிரிழந்த சிசுவை அகற்றுவதற்கான தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

முன்னதாக சிறப்பு மருத்துவக் குழுவினர் பரிசோதனைக்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு உயர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று பரிந்துரைத்தனர். இதையடுத்து அந்த பெண், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் அரசு செய்து வருவதாக வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்திருந்தார்.

கருவில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றநிலையில், அறுவை சிகிச்சை மூலம் சிசு தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பெண்ணின் கை, கால், முதுகு, தண்டுவடம் ஆகியவை பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com