

திருவாரூர்,
திருவாரூர் பகுதியில் காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 27 பேரில் 4 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வெப்பநிலை மற்றும் திடீரென பெய்யும் மழையால் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு வகையான நோய்களும் காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 27 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை பெற்று வரும் 27 பேரில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி, மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.