

கோவில்பட்டி,
கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான கருப்பசாமி (வயது 34) கடந்த 19-ந்தேதி காஷ்மீர் லடாக் பகுதியில் வாகனத்தில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் புதுடெல்லியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து கருப்பசாமியின் உடல் அவரது சொந்த ஊரான தெற்கு திட்டங்குளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், கன்யா(7), வைஷ்ணவி(5) ஆகிய மகள்களும், பிரதீப்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர். இதனிடையே ராணுவ வீரர் கருப்பசாமியின் மனைவி தமயந்தி தனது மகனை ராணுவத்தில் சேர்க்கவும், தனது மகளை ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆக்கவும் முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.