இறைச்சி கடைகள், ஓட்டல்களில்உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனைவிதிகளை மீறியவர்களுக்கு அபராதம்

இறைச்சி கடைகள், ஓட்டல்களில்உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனைவிதிகளை மீறியவர்களுக்கு அபராதம்
Published on

தர்மபுரியில் உள்ள இறைச்சி கடைகள், ஓட்டல்களில் திடீர் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா மேற்பார்வையில் தர்மபுரி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தர்மபுரி பஸ் நிலையம், சந்தைப்பேட்டை, குமாரசாமி பேட்டை, பழைய தர்மபுரி, இலக்கியம்பட்டி, கலெக்டரேட் பகுதிகளில் மீன் கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கெட்டுப்போன 5 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக 3 கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது 3 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

காலாவதியான உணவுப் பொருட்கள்

இதேபோல் தர்மபுரியில் நெடுஞ்சாலையோர பகுதிகளில் செயல்படும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உணவில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள், சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ.1000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஓட்டல்கள் மற்றும் தாபாக்களில் ஒருமுறை சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. இந்த எண்ணெயை மீள் சுழற்சிக்காக வழங்க வேண்டும் என்று அப்போது அறிவுறுத்தப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com