

சென்னை,
ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் பெட்டிகளில் கண்ட இடங்களில் குப்பை போடுபவர்களுக்கான அபராத தொகையை ரூ.1,000 ஆக உயர்த்தி ரெயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய ரெயில்வேயை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் ரெயில்வே விதியை மீறி ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில்வே வளாகங்களில் கண்ட இடங்களில் குப்பை போடுபவர்கள் மற்றும் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், ரெயில் நிலைய பகுதிகளில் குப்பை போடும் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. பயணிகள் பலர் தொடர்ந்து பொது இடங்களில் குப்பைகளை வீசி வந்தனர்.
இதனால், ரெயில்வே வளாகங்களை தூய்மையாக பராமரிப்பதில் பெரும் சவால் நீடித்து வந்தது. இதையடுத்து, குப்பை போடுபவர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன் ஒருபகுதியாக, குப்பை போடுவோருக்கான அபராதத் தொகையை இரட்டிப்பாக்க தீர்மானிக்கப்பட்டது. அந்தவகையில், இனி ரெயில் நிலைய பகுதிகள் மற்றும் ரெயில் பெட்டிகளில் விதிகளை மீறி குப்பை போடுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி முதல் அறிவிக்கப்பட்ட இந்த அபராத தொகை உயர்வு, தற்போது மத்திய ரெயில்வே துறை சார்பில் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், பயணிகள் அனைவரும் ரெயில்வே வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.