தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கைவிரல் துண்டிப்பு

தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கைவிரல் துண்டிக்கப்பட்டது. இதற்கு காரணம் நர்சின் அலட்சியம் காரணமா? என துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டீன் கூறினார்.
தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கைவிரல் துண்டிப்பு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 34). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரியதர்ஷினி (20). இவர்களுக்கு திருமணமாகி 1 ஆண்டு ஆகிறது. இந்த நிலையில் கர்ப்பம் அடைந்த பிரியதர்ஷினி பிரசவத்திற்காக தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 25-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது.

குறைபிரசவத்தில் குழந்தை பிறந்ததால், அந்த குழந்தைக்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், இதனால் தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு குழந்தையின் இடது கையில் மருந்து ஏற்றும் சாதனம் வழியாக உணவு வழங்கப்பட்டு வந்தது. குழந்தையின் கை அசையாமல் இருக்கவும் டாக்டர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

கைவிரல் துண்டிப்பு

தொடர் சிகிச்சையின் காரணமாக குழந்தை உடல்நலம் தேறி நல்ல நிலைக்கு வந்தது. குழந்தை ஆரோக்கியமாக இருந்ததால் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தாயையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனால் குழந்தையின் கையில் இருந்த மருந்து ஏற்றும் சாதனத்தை அகற்ற நர்சு ஒருவர் முயற்சி செய்தார். அவர் கைகளால் அதை அகற்றாமல் கத்தரிக்கோலால் நறுக்கியபோது குழந்தையின் கை பெரு விரல் துண்டானது.

தையல் போடப்பட்டது

இதை பார்த்து அந்த நர்சு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குழந்தையின் கையில் இருந்து ரத்தம் சொட்டியதை கண்ட தாய் பிரியதர்ஷினி கதறி அழுதார். கவனக்குறைவால் தவறு நடந்து விட்டதை அறிந்த நர்சு உடனடியாக டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் அங்கு விரைந்து வந்து குழந்தையின் துண்டான விரலை கையுடன் இணைத்து தையல் போட்டார்.

தற்போது குழந்தை நல்ல நிலையில் இருந்தாலும் அந்த விரலின் நிலை பற்றி எந்தவித தகவலும் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு மனஉளைச்சலுக்கு ஆளான அந்த நர்சு பணிக்கு வரவில்லை.

நர்சின் அலட்சியம் காரணமா?

குழந்தையின் நிலை குறித்து பெற்றோர்களிடம், டாக்டர்கள் சரியான முறையில் விளக்கம் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் நர்சின் அலட்சியம் காரணமாக நடைபெற்றதா? என்பது குறித்து விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் விசாரணை நடத்தி வருவதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வரும், ஆஸ்பத்திரி டீனுமான ரவிக்குமார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com