

சென்னை,
வருவாய் மேம்பாட்டுக் குழுவின் முதலாவது நேரடிக் கூட்டம் இன்று நடைபெற்றது. முக்கிய வருவாய் ஈட்டும் துறைகள் தங்கள் கருத்துக்களை இதில் முன்வைத்தன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
மாண்டேக் சிங் அலுவாலியாவின் தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த வருவாய் மேம்பாட்டுக் குழுவின் முதலாவது நேரடிக் கூட்டம், சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் கட்டடத்தில் இன்று நடைபெற்றது.
2. மாநிலத்தின் சொந்த வரி மற்றும் வரியல்லாத வருவாயை மேம்படுத்தி நிலைத்தன்மையுடன் பராமரிப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கும் பொருட்டு இக்குழு அமைக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில், மாநிலத்தின் முக்கிய வருவாய் ஈட்டும் துறைகளான வணிக வரிகள், பதிவுத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், போக்குவரத்துத் துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை, நீர்வளத் துறை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம் மற்றும் பொதுத் துறை மாநிலக் கழகம் ஆகியவை விரிவான விளக்கக்காட்சிகளை அளித்தன.
3. ஒவ்வொரு துறையும், தொழில்நுட்பப் பயன்பாடு உள்ளிட்ட தனது வருவாய் ஆதாரத்தின் அமைப்பு மற்றும் நிர்வாகம் தகவல், வசூலின் போக்கு, மற்றும் பொருளாதார வளர்ச்சியுடனான இணக்க நிலை, வருவாய் இழப்புகள், வரி ஏய்ப்பு, நிர்வாக நடைமுறை இடர்பாடுகள் உள்ளிட்ட நீண்டகாலமாக நிலவிவரும் சவால்கள், முழு வருவாய் ஈட்டும் ஆற்றலுக்கும் ஈட்டப்பட்ட வருவாய்க்கும் இடையேயான இடைவெளி, பிற மாநிலங்களின் நடைமுறைகளுடனான ஒப்பீடு, மற்றும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் வருவாய் மேம்பாட்டிற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குழுவின் முன் வைத்தன.
4. முதல்-அமைச்சரை குழுவின் தலைவரும், உறுப்பினர்களும், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சருடன் சந்தித்து, குழு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவரித்தனர்.
5. முன்னதாக பொதுமக்கள், துறைசார் சங்கங்கள், கல்வியாளர்களிடமிருந்து மின்னஞ்சல் வழியாக ஆலோசனைகளை குழு வரவேற்றிருந்தது. பெறப்பட்ட ஆலோசனைகளை குழு பதிவு செய்து கொண்டது. தனது ஆய்வின் நோக்கம், அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலவரையறை மற்றும் எதிர்கால ஆலோசனைகள் ஆகியவை குறித்து குழு விவாதித்தது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.