

சென்னை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இன்று முதல் 10-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு நாட்களில் நேரத்தை குறிப்பிட்டு வழங்கப்பட்டிருக்கும் டோக்கன் அடிப்படையிலும், தினமும் 200 ரேஷன்கார்டுகள் வீதம் பொருட்களை வழங்கவும் கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை சமூக இடைவெளி, கிருமி நாசினி, முககவசம் போன்றவற்றை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.
என்னென்ன பொருட்கள்?
பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள 21 பொருட்களின் விவரம் வருமாறு:-
பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 1 கிலோ
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 50 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
பாசிப்பருப்பு - 500 கிராம்
நெய் - 100 கிராம்
மஞ்சள் தூள் - 100 கிராம்
மிளகாய்தூள் - 100 கிராம்
மல்லித்தூள் - 100 கிராம்
கடுகு - 100 கிராம்
சீரகம் - 100 கிராம்
மிளகு - 50 கிராம்
புளி - 200 கிராம்
கடலைபருப்பு - 250 கிராம்
உளுத்தம்பருப்பு - 500 கிராம்
ரவை - 1 கிலோ
கோதுமை மாவு - 1 கிலோ
உப்பு - 500 கிராம்
கரும்பு - 1 (முழுமையானது)
துணிப்பை - 1